தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியதில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி : தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் போலீஸார் தடியடி நடத்தியதில் 5 வயது சிறுவன் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த 17-ஆம் தேதி துவங்கி இன்று நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, இன்று மாலை செந்தொண்டர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய பேரணி எட்டையபுரம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் திடல் வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், டூவிபுரம் ஐந்தாவது தெரு அருகே பேரணி சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு கார் சாலையை கடக்க முயன்றுள்ளது. பேரணியில் சென்றவர்கள் காரை நின்று செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், அது ஏ.டி.எஸ்.பி., வாகனம் என்பதால் வழி விடுமாறு போலீஸார் தெரிவித்தனர். ஆனால், வழி கொடுக்க மறுத்ததால், ஊர்வலத்தில் வந்த தோழர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீஸார் திடீரென தடியடி நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில், திருப்பூரைச் சேர்ந்த விமல் (23), அகிலேஷ் (5), திண்டுக்கல்லைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே, போலீஸாரை பேரணியில் கலந்துகொண்டவர்கள் தாக்க முற்பட்டனர். இதில், ஆயுத காவல் படைப் பிரிவைச் சேர்ந்த ராம்சுந்தர் (27), துரைராஜ் (32) ஆகியே இருவர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸாரின் தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் அரைமணி நேரம் தாமதத்திற்கு பிறகு பேரணி மீண்டும் துவங்கியது.