பொதுமக்களின் ஒத்துழைப்போடு, தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்த ஆண்டு கோவை மாநகராட்சி முதல் பத்து இடங்களுக்குள் பிடிப்பதே இலக்கு என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை: பொதுமக்களின் ஒத்துழைப்போடு, தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்த ஆண்டு கோவை மாநகராட்சி முதல் பத்து இடங்களுக்குள் பிடிப்பதே இலக்கு என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள சுத்தமான நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த வருடம் கோவை மாநகரம் 16-வது இடத்தைப் பிடித்திருந்தது.

இதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தூய்மை பாரத இயக்கத்தின் ஸ்வச் சர்வேக்ஷன் 2018 - சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. கள விளம்பர அலுவலகம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், தூய்மையான நகரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பல்வேறு அமைப்பினருக்கும், குடியிருப்பு நல சங்கங்களுக்கும், ஆர்வலர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கள விளம்பர இயக்குநரகத்தின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் இயக்குநர் எம்.அண்ணாதுரை, தூய்மை பாரத திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி வரும் கோவை மக்களுக்கு, வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

மேலும் அவர் பேசுகையில், ''மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியை விட, குறைவான அளவில் நிதியை பெற்றாலும், கோவை மாநகரம், தூய்மை பாரத திட்டத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறது. மாநகராட்சியோடு இணைந்து பொதுமக்கள், மாணவர்கள், ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்வச் சர்வேக்ஷன் திட்டத்தில் முதலிடத்தை கைப்பற்றி, அதன் கொண்டாட்ட நிகழ்வில் மீண்டும் அனைவரையும் சந்திக்க ஆசைப்படுகிறேன். மேலும், முதலிடம் பெறுவது மட்டுமே, நமது இலக்காக இருக்கக் கூடாது. அதையும் தாண்டி யோசித்து, பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தி, அனைத்து சமூகத்தினருக்குமான தூய்மையான நகராக கோவையை உருவாக்க வேண்டும்''. என்றார்.

முன்னதாக, ஸ்வச் சர்வேக்ஷன் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காக, மேற்கு மண்டல மாநகராட்சி அலுவலகம் முதல் கலையரங்கம் வரை விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது :- பொதுமக்களின் ஒத்துழைப்போடு, தூய்மையான நகரங்களின் பட்டியலில் சென்ற வருடம் 16-வது இடத்தைப் பிடித்தோம். இந்த வருடம் முதல் பத்து இடத்தைப் பிடிக்க வேண்டும். அதற்கு அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். குப்பைகளை பொது இடங்களில் கொட்டக் கூடாது. பொது கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். மேலும், மக்கும் தன்மையுடைய பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மேற்கு மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.