போட்டி தொடங்கியது முதலே காளைகள் சீறிப்பாய்ந்தன. ஆனால், சற்றும் சளைக்காத வீரர்கள் திமிரிய காளைகளை அடக்கினர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டியில் 535 காளைகள் பங்கேற்றன.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தவும், அதனைக் கண்டுகளிக்கவும் ஆர்வம் காட்டினர்.
அதன்படி, சமீபத்தில் கோவையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

இதற்கான அறிவிப்பு வெளியானவுடனேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700-க்கும் மேற்பட்ட காளைகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதாக பதிவாகின.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதற்காக பெயர்களை பதிவு செய்தனர்.
தொடர்ந்து, இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
முரட்டுக் காளைகள்
மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண திருப்பூர் மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அலகுமலையில் குவிந்தனர்.

போட்டி தொடங்கியது முதலே காளைகள் சீறிப்பாய்ந்தன. ஆனால், சற்றும் சளைக்காத வீரர்கள் திமிரிய காளைகளை அடக்கினர்.
அவ்வாறு காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களில் 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வீர விளையாட்டுப் போட்டியில் விக்னேஷ் என்ற மாடுபிடி வீரர் 11 மாடுகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ராஜசேகர் என்ற வீரர் 9 மாடுகளை அடக்கி இரண்டாம் பரிசைப் பெற்றார்.

சிறப்பான முறையில் ஜல்லிகட்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்த திருப்பூர் மாவட்ட மக்கள், இந்த விளையாடுப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.