கோவை கோணியம்மன் கோவில் குளத்தை மாநகராட்சி ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடமாக்கியுள்ளதாக பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை கோணியம்மன் கோவில் குளத்தை மாநகராட்சி ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடமாக்கியுள்ளதாக பா.ஜ.க., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோணியம்மன் கோவிலுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''இந்து அறநிலையத்துறை கோவில்களையும், கோவில் சொத்துகளையும் காப்பாற்றவில்லை. கோவில் சொத்துகளை தி.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் கூட்டம் கொள்ளையடித்துள்ளது. இந்து அறநிலைய துறை, இந்து அறத்தை அழிக்கும் துறையாக செயல்படுகிறது. நமது கோவில், நமது உரிமை. இவற்றை மீட்க இந்துக்கள் வீதிக்கு வர வேண்டும். கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் அறிவிக்கை வெளியிட வேண்டும்.

கோவை கோணியம்மன் கோவில் குளத்தை மாநகராட்சி ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடமாக்கியுள்ளது. தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு சொந்தமான கோவை கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரிக்கான நிலங்கள், போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலம் வாங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் வங்கி பண மோசடியில் ஈடுபட்டுள்ள நீரவ் மோடியின் கம்பெனிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. வங்கி பணம் திரும்ப வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீரவ் மோடி, மல்லையா போன்றவர்களுக்கு காங்கிரஸ் அரசே வங்கியில் கடன் கொடுக்க நிர்பந்தம் செய்தனர். என்றார்.
மேலும், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தேன் என்ற ஒ.பன்னீர்செல்வம் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ஒ.பன்னீர்செல்வத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பது தவறு எனக் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கும், விவசாயிகளுக்கும் தொடர்ந்து துரோகம் செய்தது தி.மு.க., தான். கர்நாடகாவின் சில்மிஷங்களை முடிவுக்கு கொண்டு வரும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மத்திய அரசு செயல்படுத்தும். தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடு குறித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து சரியானது. பொன்னாரின் கருத்தை எதிர்த்து பேசுபவர்கள் புத்தி சுவாதினம் இல்லாதவர்கள். இவ்வாறு கூறினார்.