மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
கோவை: மாநகரில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

கோவை மாநகரை குற்றமில்லா நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர் கோவை மாநகர போலீசார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ராமநாதபுரம், போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறித்து சென்றவர்களை கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த காட்சியில், இரு சக்கர வாகனத்தில் வரும் இரண்டு வாலிபர்கள் சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகையை பறித்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் இடம் பெற்றுள்ள நபர்கள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.