எந்த மாநிலத்தில் ஆளும் அரசு கவிழும் சூழலில் இருக்கிறதோ அங்கு பொதுத் தேர்தல் நடத்தாமலும், பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலத்திலும் ஆளுநரின் உதவியோடு பாஜக ஆட்சி நடத்த முயல்கிறது என பழ.கருப்பையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கோவை : எந்த மாநிலத்தில் ஆளும் அரசு கவிழும் சூழலில் இருக்கிறதோ அங்கு பொதுத் தேர்தல் நடத்தாமலும், பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலத்திலும் ஆளுநரின் உதவியோடு பாஜக ஆட்சி நடத்த முயல்கிறது என பழ.கருப்பையா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு கோவை புளியகுளத்தில் "கோவை மக்கள் மேடை"-யின் சார்பில் மக்கள் ஒற்றுமை மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, பழ.கருப்பையா, பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மகாத்மா காந்தியின் படுகொலை தொடங்கி தற்போது நிகழும் பல அசாதாரண சூழல் வரை இந்துத்துவா சக்திகளின் சூழ்ச்சிகள் பற்றி இந்நிகழ்ச்சியில் பேசப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்குப் பிறகு பழ. கருப்பையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழர்கள் எப்போதும் எதற்காகவும் பிச்சை எடுத்தது இல்லை. காவிரி நீர் நமது உரிமை. மாநிலங்களின் தேர்தலுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் சாதமாக மத்திய அரசு நடப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அழகல்ல. நமது உரிமைகளைப் பெற அமைச்சர்களை நம்பி பயன் இல்லை. குறிப்பாக தெர்மாகோலை நம்பும் அமைச்சர்களை நம்பி என்ன பயன்.
பொன். ராதாகிருஷ்ணன் ஒரு பச்சை திராவிடன் என்ற நிலைக்கு உயர்ந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது பெரியாரின் வெற்றி. எடப்பாடிக்கு நிறைய பேருந்துகள் பல்வேறு பெயர்களில் உள்ளது. பேருந்துக் கட்டணம் உயர்த்தியதற்குத் தாறுமாறாக தனியார் முதலாளிகளிடம் பணம் கேட்டு ஆளும் கட்சியினர் மிரட்டி வருகின்றனர்.
அரசு என்பது சுரண்டலுக்கானது என்பதை ஜெயலலிதா அமல்படுத்தி 20 ஆண்டுகாலம் ஆகிறது. அதன் வழி வந்தவர்களும் அதைத்தான் செய்வார்கள்.
தமிழக அரசை மோடி தாங்கிப் பிடிக்கிறார். அவர் பின் இருந்து தாங்காமல் விட்டிருந்தால் என்றோ தமிழக அரசு கவிழ்ந்திருக்கும். ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தினால் நல்லது தான். செலவு மிச்சமாகும்.
எந்த மாநிலத்தில் ஆளும் அரசு கவிழும் சூழலில் இருக்கிறதோ அங்கு பொதுத் தேர்தல் நடத்தாமல், பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலத்திலும் ஆளுநரின் உதவியோடு பாஜக ஆட்சி நடத்த முயல்கிறது.
இவ்வாறு பழ. கருப்பையா பேசினார்.
இதனைத்தொடர்ந்து, திருமுருகன் காந்தி பேசுகையில், போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது. போராடும் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, அத்துமீறினாலோ எங்களைப் போன்ற முற்போக்கு இயக்கங்கள் அனைத்தும் மாணவர்களுக்குத் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.