ஜெயலலிதா மரண விவகாரத்தில், சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தவர்களின் விவரங்களை அளிக்க விசாரணை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, ஆணையத்தின் விசாரணை பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில், சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தவர்களின் விவரங்களை அளிக்க விசாரணை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, ஆணையத்தின் விசாரணை பிப்ரவரி 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மற்றும் அவரின் உதவியாளர்கள், உறவினர்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது. 75 நாட்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்பது பற்றிய மருத்துவ சிகிச்சை விவரங்கள் 2 சூட்கேசில் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
மேலும், ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பதில் அளித்தனர். மேலும், சசிகலாவுக்கு எதிராக சிலர் தகவல்களைக் கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் விவரங்களை தர ஆணையத்தில் அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில், சசிகலாவுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் விவரங்களை தர ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு 22 பேரின் வாக்குமூலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புகார்தாரர்களிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை நடத்தவும் ஆறுமுகசாமி ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. சிவக்குமார், பூங்குன்றம், பாலாஜி ஆகிய 3 பேரின் விவரத்தை மட்டும் தர மறுக்கப்பட்டுள்ளது. 3 பேரின் தகவல்கள் முழுமையாக பெறப்படவில்லை என்று ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சசிகலா தரப்பினரின் குறுக்கு விசாரணைக்காக வரும் பிப்ரவரி 12-ம் தேதிக்கு தனது விசாரணையைத் தொடங்கும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.