வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி காட்டு எருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறை: வால்பாறை கருமலை எஸ்டேட் பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த மூதாட்டி காட்டு எருமை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வால்பாறை அடுத்துள்ள தேயிலை எஸ்டேட் பகுதி மற்றும் அதிகரித்து வரும் குடியிருப்புகளால் வன விலங்குகளுக்கான வாழ்விடம் குறைந்துகொண்டே வருகிறது. மேலும், வனப்பகுதிகளை ஆக்கிரமித்தும் ஆங்காங்கே விடுதிகள் கட்டப்பட்டு வருவதால் வாழ்வாதாரத்தை இழக்கும் வன விலங்குகள் பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று கருமலை எஸ்டேட் பகுதியில் வீட்டின் முன்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்த சீதாலட்சுமி (62) என்னும் மூதாட்டியை அங்கு வந்த காட்டெருமை தாக்கியுள்ளது. இதனால், பலத்த காயமடைந்த சீதாலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கருமலை தோட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு சீதாலட்சுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, வால்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வால்பாறை வனத்துறை மற்றும் வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
முன்னதாக, இதே கருமலை எஸ்டேட் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுச்சாமி என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காட்டெருமை தாக்கி சீதாலட்சுமி என்பவர் உயிரிழந்துள்ளது கருமலை எஸ்டேட் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளால் மனித உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.