அன்னூர் அருகே பெண்ணை கொலைசெய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ஜனவரி 26
அன்னூர் அருகே பெண்ணை கொலைசெய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மயில்சாமி. இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ள நிலையில் இருவரும் தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீடு விரிவாக்கப் பணிக்காக பணிகள் மேற்கொண்டு வரும் இவர்களது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மூன்று வடமாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் இரவு பணி மேற்கொள்ள வேண்டும் என வீட்டின் உரிமையாளர்களான ராஜாமணி மயில்சாமி தம்பதியினரிடம் கூறியுள்ளனர்.
பின்னர், இரவு டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்ட வட மாநில தொழிலாளர்கள் மூவரும் இரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியை கதவைத் தட்டி எழுப்பி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க ராஜாமணி வீட்டினுள் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற தொழிலாளர்கள் அவரை ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மயில்சாமியை கட்டிவைத்து அவருக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு ராஜாமணியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து வீட்டில் போட்டுள்ளனர். மின்சாரம் பாய்த வலியில் மயில்சாமி அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்த போது வட மாநில கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயில்சாமியை மீட்ட கிராம மக்கள் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையுண்ட ராஜாமணியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.