இன்று 69-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டம், உதகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.
நீலகிரி, ஜனவரி 26
நாடு முழுவதும் இன்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் 69-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா, தேசியக் கொடியேற்றி காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 3 கோடியே 13 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மேலும், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்குப் பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் தோடர், கோத்தர், இருளர் ஆகியோர்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா:-
நீலகிரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழும் முதுமலை புலிகள் காப்பகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முதுமலை யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் அணி வகுத்து நிற்க, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேசிய கொடியை ஏற்றினார்.
இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்துகொண்டு யானைகள் அணி வகுத்து நின்றதை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.