தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் திருவள்ளுவர் சிலை முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 24
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திர சரஸ்வதி மற்றும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோர் திருவள்ளுவர் சிலை முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், சூலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்ற தமிழ் சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காத சம்பவம் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மரியாதை செலுத்தும் தமிழக மக்கள் மனதைப் பாதித்துள்ளது.
விஜயேந்திர சரஸ்வதி மற்றும் அந்நிகழ்ச்சியை நடத்திய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகிய இருவரும் தமிழையும், தமிழர்களையும் அவமதித்ததற்காகத் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.
பொது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திர சரஸ்வதி தியானம் செய்ததாக விளக்கம் அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.