கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கோவை, ஜனவரி 24
கோவையில் வேகமாக வந்த ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் சுதீஷ் குமார் (20). இவர், அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்ததும் அப்பகுதியில் இருந்த ரயில் தண்டவாளத்தில் சுதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சதீஸ் என்பவரும் நடந்து சென்றனர். அப்போது, இருவரும் ரயில் வரும் போது செல்பி எடுக்க முயன்றனர்.
அப்போது, பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ரயில் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் ரயில் நிலைய காவலர்கள், இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுதீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சதீஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.