இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதற்கு மக்கள் தான் காரணம் என்று அக்காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி பேசினார்.
கோவை, ஜனவரி 23
இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதற்கு மக்கள் தான் காரணம் என்று அக்காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி பேசினார்.

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு 'இந்தியாவின் சிறந்த காவல் நிலையம்' என்ற விருது மத்திய உள்துறை செயலகத்தால் வழங்கப்பட்டது.
இந்த விருதினைப் பெற்று தமிழக காவல்துறையை பெருமையடையச் செய்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு பாராட்டு விழா இன்று மாலை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
ஜெகநாதன் டெக்ஸ்டைல் நிறுவனத்தினர் நடத்திய இந்த பாராட்டு விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, மாநகர துணை ஆணையர்கள், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) ஜோதி, ஆய்வாளர் (குற்றப்பிரிவு) ஈஸ்வரன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் அக்காவல் நிலையத்தில் பணியாற்றும் பெரும்பாலான காவலர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில், ஆய்வாளர் ஜோதி பேசுகையில், 'இந்த விருதினை வழங்குவதற்காக மத்திய அரசில் இருந்து வந்த அதிகாரிகள் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்களிடமும் விசாரித்தார்கள். விருது எங்கள் உழைப்புக்கு மட்டும் கிடைத்ததல்ல, மக்களின் ஆதரவால் மட்டுமே இந்த விருது கிடைத்துள்ளது. அவர்கள் தான் இந்த விருதை பெற்றுக் கொடுத்துள்ளனர்' என்றார்.

தொடர்ந்து, துணை ஆணையர் லட்சுமி பேசுகையில், 'காவல் நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு என் உயர் அதிகாரிகளும், சக காவலர்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அவர்களின் ஒத்துழைப்பே இந்த விருதுக்கு காரணம். மக்கள் தான் மற்றொரு காரணம். அவர்கள் கொடுத்த நற்பெயரின் அடிப்படையிலேயே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும், இந்த விருதினை பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.' என்று பேசினார்.
மாநகர காவல் ஆணையர் பெரியய்யா பேசுகையில், ' உலகின் மிகச்சிறந்த காவல்துறையாக ஸ்காட்லாந்து காவல்துறை உள்ளது. அதற்கு இணையாக இருப்பது தமிழ்நாடு காவல்துறை.
அவர்கள் காவல் நிலையத்தில் ஆண்டு ஒன்றிற்கு 100-க்கும் மேற்பட்ட வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், இங்கு அப்படி இல்லை, பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெறுகிறது. இதனால் அதிகமான வழக்குகளும் பதிவாகின்றன. இவற்றையெல்லாம் கடந்து ஒரு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரியது. விருதுக்காக போலீசார் பெற்ற மகிழ்ச்சியை காட்டிலும், கோவை மக்கள் பெற்ற மகிழ்ச்சியே அதிகம் "இது நம்ம காவல் நிலையம்" என்று கூறி பெருமிதம் கொள்கின்றனர் நம் கோவை மக்கள்.' என்று பேசினார்.
மாவட்ட ஆட்சியர் ஹரிஹரின் பேசுகையில், 'இந்த விருதானது கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கே பெருமை சேர்த்துள்ளது. இந்தியாவில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன.
பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் சிறப்பான கட்டிடங்கள் கொண்ட காவல் நிலையங்கள் எல்லாம் உள்ளன. ஆனால், மக்கள் நேசிக்கும் அளவிற்கு செயல்பட்டதாலேயே ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதலிடம் பிடித்து தேசிய விருது பெற்றுள்ளது. இந்த வெற்றி என்பது ஒருவருக்கானது அல்ல. அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த காவலர்களுமானது.
எதிரிகள் யார்? என்று தெரிந்து போராடுபவர்கள் ராணுவத்தினர்.
ஆனால், எதிரிகள் மக்களுள் மக்களாய் இருக்கும் போது அவர்களிடம் போராடி சமுதாயத்தை பாதுகாப்பது மிகப்பெரிய செயல்.
இதர காவல் நிலையங்களும் இந்த விருதை பெற முயற்சி செய்ய வேண்டும்.' இவ்வாறு அவர் பேசினார்.