உதகை படகு இல்லத்தில் செயல்பட்டு வந்த சாகச சைக்கிள் விளையாட்டு ஒப்பந்தப்புள்ளி பிரச்சனை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீலகிரி, ஜனவரி 16
உதகை படகு இல்லத்தில் செயல்பட்டு வந்த சாகச சைக்கிள் விளையாட்டு ஒப்பந்தப்புள்ளி பிரச்சனை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. குறிப்பாக, உதகை அரசு தாவரவியல் பூங்கா, உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா போன்ற சுற்றுலா தளங்கள், இங்கு ஆண்டுதோறும் வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் மனதை விட்டு நீங்காத வண்ணம் புகழ் பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு கீழ் இயங்கும் உதகை படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வத்துடன் வருகின்றனர். உதகை படகு இல்லத்தில் படகு சவாரி மட்டும் அல்லாத பல்வேறு விளையாட்டுகள் உதகை படகு இல்லத்தில் இயங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகை படகு இல்லக் கரையில் அமைந்துள்ள பைன் மர சோலையில் சுற்றுலாத்துறை சார்பில் 3 வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தனியாருக்கு இந்த பைன் மர சோலை கொடுக்கப்பட்டது.

இதில், தனியார் நிறுவனம் படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் சைக்கிள் சாகச விளையாட்டுகள் நடத்தப்பட்டு வந்தது, இந்த சைக்கிள் சாகச விளையாட்டுகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது உள்ள ஒப்பந்ததாரரின் ஒப்பந்தப்புள்ளி முடிவடைந்துள்ளதால் சைக்கிள் சாகச விளையாட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பல மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் மரங்களினால் ஆன சைக்கிள் சாகச ஓடுதளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தற்போது, சுற்றுலாத்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், நிர்ணயித்த தொகையினை விட ஒப்பந்ததாரர்கள் குறைவாகக் கேட்டு வருவதால் ஒப்பந்தப்புள்ளி கோருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ள சைக்கிள் சாகச விளையாட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.