கோவை, ஜனவரி 8
நீதிமன்றங்களில் சாட்சி அளிக்கும் நபர்களுக்கு அழைப்பாணை தகவல் அனுப்பும் வகையில் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் குறுஞ்செய்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது தேசிய மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் "குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலை பின்னல் அமைப்பு" தமிழ்நாடு காவல்துறையில் உள்ள முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் சேவையை மேம்படுத்தும் வகையில் http://eservices.tnpolice.gov.in எனும் இணையதளத்தின் மூலமாக இணைய வழி சேவையும் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம், புகார் பதிவு, முதல் தகவல் அறிக்கை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்யும் வசதி, வாகனங்களின் விபரம் தேடல், காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்துபோன நபர்களின் விபரங்கள் பற்றிய தகவல், சாலை வாகன விபத்து தொடர்பான ஆவணங்கள் பதிவிறக்கம் உள்ளிட்டவற்றை பதியலாம்.
மேற்கண்ட இணையதள சேவைகளை பொதுமக்கள் நேரடியாக காவல்துறை இணையதளத்திலும் மற்றும் Google Play Store-யில் செயலியை பதிவிறக்கம் செய்தும் பயனடையலாம்.
குறுஞ்செய்தி மூலம் சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை:-
தற்பொழுது, சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை குறித்த தகவல்களை குறுஞ்செய்தி மூலமாக அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை தமிழக முதலமைச்சர் கடந்த ஜனவரி 4ம் தேதியன்று துவக்கி வைத்தார்.
இந்த குறுஞ்செய்தியில் காவல்நிலையத்தின் பெயர், வழக்கு எண், எந்த நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், தேதி மற்றும் நேரம், மேலும் தகவல் அறிய காவல்நிலைய தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் அனுப்பிவைக்கப்படும். குறிப்பாக, சாட்சிகளுக்கு வசதியாக தமிழில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
குறுஞ்செய்தி மூலம் நீதிமன்ற அழைப்பாணை தகவல் அனுப்பும் வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.