கோவை, ஜனவரி 05
தொழிலாளர்கள் பிரச்சனைகளை தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் அலட்சியப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய எ.ஐ.டி.யு.சி.யினர், கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை தொழிலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பாக தீர்வு காணாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை ஏ.ஐ.டி.யு.சி.யினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 480 நாட்கள் பணியாற்றும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், நலவாரியம் மற்றும் மாநில ஆலோசனை வாரியரங்களில் முத்தரப்பு குழு அமைக்க வேண்டும், வாரிய நிதிபலன் தொகையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசையும், தொழிலாளர் நலத்துறையையும் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.