கோவை, ஜனவரி 3
நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்திற்கும் மேல் வாடகைக் கார் ஓட்டினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கோவையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக்கு கார் (கால் டாக்சி) ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், மோட்டார் வாகன சட்டப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மிகாமலும், வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும், ஒருநாள் ஓய்வுடன் வானங்களை இயக்கவும், மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இன்று கால் டாக்சி ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் சட்டம், 1961-ன் கீழ் 91 (1) பிரிவின் படி 8 மணி நேரத்திற்கும் மேல் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் சட்டமாகும்.
இதுபோன்ற நடைமுறைக்கு சாத்தியமற்ற சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுகுறித்த கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தோம். ஆனால், அது பின்பற்றப்படவில்லை" என்றனர்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் அது தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து கால் டாக்சி ஓட்டுநர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
