வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.
வால்பாறை, ஜனவரி 3
வால்பாறை அருகே சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டது.
வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மண் கடத்தப்பட்டு அப்பகுதியில் கட்டிட வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், முறைகேடாக விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் புகார் வந்ததையடுத்து வட்டாட்சியர் சு.குணசேகரன் தலைமையில் வருவாய்த் துறை அலுவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, நல்லகாத்து சுங்கம் பகுதியில் வாகனத்தில் முறைகேடாக ஆற்று மணல் அள்ளப்படுவது கண்டறியப்பட்டது.

இதனிடையே, அதிகாரிகளைக் கண்ட மணல் கொள்ளையர்கள் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் மேற்படி மணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வால்பாறைக்கு உட்பட்ட சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "வால்பாறை நகராட்சி ஒப்பந்தப்படி கட்டுமாகப் பணிகளுக்கு கரூர் மணல் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஆற்று மணலைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கட்டிடம் உறுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் குறைகிறது. இந்த சட்டவிரோத செயல்களுக்கு சில அரசியல் பிரமுகர்களும் உடந்தையாக உள்ளனர்.

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.