மாவட்டத்தில் புதிதாக 13 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை : மாவட்ட காவல்துறை

கோவை, டிசம்பர் 31

2017 ஆம் ஆண்டு நிறைவடைவதையொட்டி, நடப்பு ஆண்டில் கோவை நகரில் மாவட்ட காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பாளர் பா. மூர்த்தி தெரிவித்தார்.



அவர் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம் மதரீதியாக பதற்றமான மாவட்டமாக இருந்தாலும், 2017-ம் ஆண்டில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலங்கள், ரம்ஜான், பக்ரீத், பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின் 25-ம் ஆண்டு நினைவு தினம், கிறித்துவ மத விழாக்கள் ஆகியவற்றிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதால் அமைதியாக நடந்து முடிந்தன. பிரதமரின் ஈஷா யோக மையம் வருகை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் பாதுகாப்பு பணிகள் நன்கு திட்டமிடப்பட்டு, எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி சிறப்பாக நடநது முடிந்தன. 

ஜல்லிக்கட்டு போராட்டம், டாஸ்மாக் மதுக்கடைகளுககு எதிரான போராட்டங்கள், நீட் தேர்வு போராட்டம், ஜாக்டோ, ஜியோ, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், சோலையார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பிரிகால் ஆலை தொழிலாளர்களின் போராட்டங்கள் முதலிய முக்கிய சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சனைகள் மிகக் கவனமாகக் கையாளப்பட்டன. 

மாவோயிஸ்ட்கள் நடமாட்டம், மணல் மற்றும் அரிசி கடத்தல், கோழிக்கழிவுகள், வெடிபொருட்கள் போன்றவை அதிகளவில் கடத்தப்படும் பகுதியான கோவை மாவட்டம், கேரளா மாநிலத்தின் எல்லையோரங்களில் உள்ள 13 சோதனைச் சாடிவகளுடன், புதிதாக 13 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு மாநில எல்லைப் பகுதிகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

2017-ம் ஆண்டில் 1,432 வழக்குகள் சட்டம் மற்றும் ஒழுங்கின் கீழும், 5,621 வழக்குகள் மற்ற சட்டப்பிரிவுகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கொலை, வன்முறைச் சம்பவங்கள் 12 சதவீதம் குறைந்துள்ளன. மேலும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 16 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டில் ஆதாயக் கொலைகள் எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 532 களவு தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, வழிப்பறி சம்பவங்கள் 75 சதவீதம் குறைந்துள்ளன. மேலும், இந்தாண்டில் வரதட்சணை மரணங்கள் ஏதும் நிகழவில்லை. பாலியல் குற்றங்கள் 40 சதவீதம் குறைந்துள்ளன. 

வரும் 2018-ம் ஆண்டில் குற்றநிகழ்வை 20 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நன்கு பயிற்சி பெற்ற அதிவிரைவு மோட்டார் சைக்கிள் கொண்ட 20 செயின் பறிப்பு தடுப்பு குழுக்கள், ஒவ்வொரு நகர விரிவாக்கப் பகுதிகளிலும், அப்பகுதி மக்களைக் கொண்ட குற்றத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் ரோந்துக் குழுக்களை உருவாக்குதல், தொழில்துறையினர் பங்களிப்புடன் குற்றத்தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்றவற்றின் மூலம் இவ்விலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேபோல, இந்தாண்டில், 2,339 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன விபத்துக்கள் 11 சதவீதம் குறைந்துள்ளன. 4.7 சதவீதம் உயிரிழப்புக்களும் குறைந்துள்ளன.

2017-ல் காவல்நிலையங்களில் தேங்கிக் கிடந்த பழைய காலாவதியான கோப்புக்கள் உரிய அனுமதி பெற்று அழிக்கப்பட்டு, 36,065 டன் காகிதங்கள் மறு பயன்பாட்டிற்காக மத்திய சிறைத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,502 வாகனங்களில் உரிய சட்ட அனுமதிப் பெற்று 954 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

இதனிடையே, மாவட்டத்தில் மொத்தம் 33 காவல்நிலையங்கள் உள்ளன. அவற்றில், 3 பெண்கள் காவல்நிலையங்கள், 3 போக்குவரத்து காவல்நிலையங்கள் அடங்கும். இந்த நிலையில், தடாகம், சுல்தான்பேட்டையில் புதிய காவல்நிலையங்கள் அமைக்க ஆணைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சூலூரில் புதிய அனைத்து மகளிர் காவல்நிலையம் உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டு, அது, அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும், கோவை மாவட்ட காவல்துறைக்கு, நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்துத்தர வேண்டும். 

காவலர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவ முகாம்கள் போன்றவற்றின் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தப்பட உள்ளது. காவலர் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட உள்ளது. போலீஸ், பொதுமக்களிடையே நல்லுறவு மேம்படுத்தும் விதமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், காவலர்களிடையே புத்தகம் படிக்கும் திறனை ஏற்படுத்த அனைத்து காவல்நிலையங்களிலும் நூலகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் மொத்தம் 954 காவலர்கள் மட்டுமே உள்ளனர். 24 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கோவை மாவட்டத்தில் 10 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு, கோ - ஆப்ரேட்டிவ் காலனி நுழைவு, குட்டையூர் சந்திப்பு, கோவை - மேட்டுப்பாளையம் சாலை (கேஸ் கம்பெனி), என்பிடி சந்திப்பு, குஞ்சுபாளையம் சந்திப்பு (மீன்கரை சாலை), ஆனைமலை - சேத்துமடை சாலை (மாசாணியம்மன் கோவில் குண்டம் மைதானம்), எஸ்எஸ் குளம், கரியாம்பாளையம் சந்திப்பு, நீலம்பூர் சந்திப்பு ஆகியவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...