வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை, டிசம்பர் 28
வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து பல மாதங்களாக காட்டு யானைகள் நுழைந்து வருகிறது. யானைகள், இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைவதும் குடியிருப்புகளை இடிப்பதும், ரேசன் கடைகளை சூறையாடுவதும் வழக்கமான நிகழ்வாகி விட்டது.
இந்நிலையில், சோலையார் முதல் டிவிசனில் இன்று வழக்கம் போல் தோட்டத் தொழிலாளர்கள் காலை 7.55 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பீல்டு எண் 8-ல் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை பணிக்கு சென்று கொண்டிருந்த அழகம்மாள் (52) என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனத்துறை அதிகாரிகள் சேகர், விஜயன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சோலையார் எஸ்டேட் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சின்கோனா, நீரார்டேம், பன்னிமேடு, பாரளை போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.