ரயில்வே மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து பீளமேடு பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, டிசம்பர் 28
ரயில்வே மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து பீளமேடு பகுதியில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, பீளமேடு பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து, கடந்த டிசம்பர் 3-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதை அமைக்கப்படுமென சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்திருந்த போதும், இதற்கான பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.

இந்நிலையில், இதனைக் கண்டித்து முருகன் நகர், ஹட்கோ காலனி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதை அமைக்காததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக துவக்கவில்லை எனில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.