திருப்பூர், டிசம்பர் 26
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பழணிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர்- 3 ஆண் 3 பெண் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூரில் இருந்து பழனிக்கு நேற்று பாதயாத்திரையாக பக்தர்கள் திருப்பூர் தாராபுரம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை சுமார் 5.30 மணி அளவில் தாராபுரத்திற்கு முன்பாக சூர்யநல்லூரை அடுத்த புதிவிநாயகர் கோயில் அருகே பக்தர்கள் நடந்துசென்றுகொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடராஜன்,பரமேஸ்வரி,விஜயா, காளிமுத்து, ராஜாமணி உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த சாந்தி என்பரை சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் இறந்துபோனார்.
இதனிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி பலியான 5 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சாலைவிபத்தில் அரசு பேருந்து மோதி பக்தர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.