கோவை, டிசம்பர் 22
கோவை மாவட்டம் வால்பாறை அருகே எஸ்டேட்டிற்குள் புகுந்து, அங்கு மேய்ந்து கொண்டிருந்த மானை சிறுத்தை வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாலை நேரங்களில் குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் அட்டகாசம் தொடர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக, குடியிருப்புக்குள் நுழையும் சிறுத்தைகள், ஆடு, கோழி போன்ற கால்நடைகளைக் கொன்றுவிட்டு செல்கின்றன. கடந்த வாரம் வால்பாறை அடுத்துள்ள அக்காமலை 2வது டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வீட்டின் பின்புறம் சங்கீதா என்பவர் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை, நாய்க் குட்டியை பிடிப்பதற்காகப் பாய்ந்த போது சங்கீதாவின் மீது உரசிச் சென்றதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு காலில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் நடைபெறுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு வரட்டுப்பாறை எஸ்டேட்டில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த மான் ஒன்றைத் தாக்கி கொன்று, குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் மீது வைத்து சாப்பிட்டது. பாதி இறைச்சியை மட்டும் சாப்பிட்ட சிறுத்தை, மீதியை அங்கேயே விட்டுச் சென்று விட்டது. காலையில் இதைப்பார்த்த மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். மீதமுள்ள மானை சாப்பிட மீண்டும் அப்பகுதிக்கு சிறுத்தை வருமா என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் குழந்தைகளை வெளியே விட வேண்டாம் எனவும், பொதுமக்கள் இரவு நேரங்களில் கவனமாக செல்லுமாறும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.