கோவை, டிசம்பர் 15
18-வது எம்.கே.சுந்தர் நினைவு தேசிய அளவிலான கார்பந்தயம் வரும் 17ம் தேதி கோவையில் நடக்கிறது. இந்தப் போட்டியைக் காண மாவட்டத்தில் உள்ள கார்பந்தய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், பெடரேசன் ஆப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கான்பிடரேசன் ஆப் இந்தியா மற்றும் கோயமுத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து 17-வது ஆண்டாக இந்தக் கார் மற்றும் இருசக்கர பந்தயத்தை நடத்தப்படுகிறது. மோட்டார் பந்தய ஆர்வலர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனப் போட்டிகளில் அனுபவம் உள்ளவர், புதிதாகப் போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் போட்டி என 3 வகையாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இப்போட்டிகள் திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் துவங்கி போகம்பட்டி, சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, காட்டம்பட்டி, செட்டிபாளையம் வழியாகத் துவங்கிய இடத்திலேயே முடிவடைகிறது. இதன்மொத்த தூரமான 120 கி.மீட்டரை குறைந்த பெனால்டி புள்ளிகளுடன் நிறைவு செய்பவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படும். மேலும், 4 சக்கர வாகன போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 7,000 மற்றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ. 4,000 மற்றும் கோப்பையும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடிப்பவர்களுக்கு கோப்பைகள் மட்டும் வழங்கப்படுகிறது.
பெண்கள் பிரிவில் புதிதாகப் போட்டியில் பங்கேற்பவர்கள் பிரிவில், முதல் பரிசாக ரூ. 5,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 3,000 மற்றும் கோப்பையும், மூன்றாம் இடத்திற்குக் கோப்பையும் வழங்கப்படுகிறது. பெண்கள் பங்கேற்கும் பிரிவில் முதலிரண்டு இடங்களுக்குக் கோப்பைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இரு சக்கர வாகன போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 6,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ. 4,000 மற்றும் கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ. 2,000 மற்றும் கோப்பையும் நான்கு மற்றும் ஐந்தாவது இடத்திற்குக் கோப்பைகள் மட்டும் வழங்கப்படுகிறது.
புதிதாகப் போட்டியில் பங்கேற்கும் ஆண்கள் பிரிவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000 மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.2,000 மற்றும் கோப்பையும், மூன்றாவது பரிசாக கோப்பை மட்டும் வழங்கப்படும். இதன் பரிசளிப்பு விழா அன்று மாலையே நடைபெறுகிறது. இதில், மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்க உள்ளார். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் சனிக்கிழமை மாலை 7 மணி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.