கோவை, டிசம்பர் 14
சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு தினத்தையொட்டி, வெஸ்டன் கார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி அருகே உள்ள வெஸ்டன் கார்ட்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், நேச்சுரல் கிளப் சார்பில் ”சர்வதேச எரிசக்தி பாதுகாப்பு தினம்” கொண்டாடப்பட்டது. இதில், சாவடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய துணைப் பொறியாளர் ஷானவாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், மின்சாரத்தை வீணடிக்கும் பல்புகளை அவர் ஒழித்தார். பின்னர், 10-ம் வகுப்பு மாணவன் வெங்கடகிருஷ்ணன், சிஃஎப்எல் மற்றும் எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவதன் நன்மைகளை எடுத்துரைத்தார். இதேபோல, 7-ம் வகுப்பு மாணவன் அனந்த கிருஷ்ணன், மின்சாரத்தைச் சேமிப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த 21 நாட்கள் போட்டி நடத்தப்பட்டது. மேலும், மின்சாரச் சேமிப்புக்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்கள் மற்றும் முழக்கங்கள் தொடர்பான போட்டிகளும் அரங்கேறியது.