கோவை, டிசம்பர் 14
ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை மற்றும் பணிக்கால பயன்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்று பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் தலைமை போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ஊதியமும் மிகக் குறைந்த அளவிலேயே தரப்படுகிறது. இதற்காக நாங்கள் போராட்டங்களில் ஈடுபடும் பொழுது போராட்டத்தை கைவிடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் தங்கள் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை.
இதனைக் கண்டித்தும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு கட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தற்போது 48 மணி நேர போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.