கோவை, டிசம்பர் 14
பேருந்துகளில் வசூலான கட்டண பணத்தை வாங்க போக்குவரத்து நிர்வாகம் காலம் கடத்துவதாகக் கூறி பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
கோவை, உக்கடம் இரண்டாவது போக்குவரத்து பணிமனையில், நேற்று மாலை பணி முடித்து திரும்பிய அரசு பேருந்துகளில் வசூலான கட்டணப் பணத்தை செலுத்த பேருந்து ஊழியர்கள் சென்றபோது அதனை வாங்காமல் நிர்வாகம் காலம் கடத்தியுள்ளது. தொடர்ந்து, இன்று காலை வரை வசூலான பணத்தை பெற்றுக் கொள்ளாமல் நிர்வாகம் காக்க வைத்த நிலையில், இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் பணிமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிர்வாகம் சார்பில் அந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுகையில், இன்று நடைபெறும் காத்திருப்புப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்பதை தடுக்கும் விதமாகவே வசூலான பணத்தை பெறாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இன்று நடத்தப்படும் காத்திருப்புப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க உள்ளோம் என்றனர்.