டிசம்பர் 12
மேட்டுப்பாளையம் அருகே குட்டியானை கண்மாயில் விழுந்ததால், பரிதவித்த பெண்யானை சாலைகளில் சென்ற வாகனங்களைத் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுண்டப்பட்டி பிரிவு வனபத்திரகாளியம்மன் கோவிலை அடுத்து தேக்கம்பட்டி சாலையோரம், பம்ப் ஹவுஸ் அருகில் ஒரு பெண் யானை சாலையில் செல்பவர்களை விரட்டியது. மேலும், வாகனங்களையும் சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் யானையை அருகில் உள்ள நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இருப்பினும், மீண்டும், மீண்டும் சாலைப்பகுதிக்கே யானை வந்ததால், வனத்துறையினர் சந்தேகமடைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் அப்பகுதி முழுவதும் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மாதம் மதிக்கத்தக்க யானைக்குட்டி பழைய வாய்க்காலுக்குள் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்காரணமாகவே, யானை ஒரே பகுதியில் திரிந்ததுடன், சாலையில் செல்பவர்களை துரத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக குட்டி யானையை மீட்டு இளநீர், குளுக்கோஸ் போன்ற ஊக்க பானங்களைக் கொடுத்து, நெல்லிமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.