டிசம்பர் 12
நிலம் ஒதுக்கியதில் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த ஜெயந்தி நடராஜன், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக 28 மாதங்கள் பதவி வகித்தார். அப்போது, ஜார்கண்ட் மாநிலம் சிங்பும் மாவட்டத்தில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை, தனியார் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளார். அவருக்கு முன்பு, துறையின் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், நிலம் ஒதுக்க மறுத்து உள்ளார். ஆனால், ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த போது, நிலம் ஒதுக்கியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று (டிச., 12) மீண்டும் சென்னையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, வருமானவரித்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.