திருப்பூர், டிசம்பர் 12
ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் அருகே உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்த இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
இதனிடையே, சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் சங்கரை கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று உடுமலை பேருந்து நிலையத்தில் வைத்து வெட்டி படுகொலை செய்தனர். கவுசல்யா காயங்களுடன் உயிர் தப்பினார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ஆணவப் படுகொலை வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இதனை விசாரித்து வந்த திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜ் இன்று இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள தந்தை சின்னசாமி (40), செல்வகுமார் (26), மதன் ஜெகதீசன் (26), மணிகண்டன் (26), கலைதமிழ்வாணன் (26), தன்ராஜ் (23), மணிகண்டன் ஆகிய 8 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார்.
அன்னலட்சுமி, பாண்டித்துறை, பிரசன்னா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.