கோவை, டிசம்பர் 11
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட ருக்ஷானா வழக்கில், வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம் எனவும், இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அவரது பெற்றோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவையைச் சேர்ந்த ஹைதர் செரீப் என்பவரின் மகள் ருக்ஷானா (21) கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதியன்று மாயமானார். இது குறித்து சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சரவணம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன மென்பொருள் பொறியாளரான பிரசாந்த் (25) என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, மாணவி ருக்ஷானாவை கொலை செய்ததை பிரசாந்த் ஒப்புக் கொண்டார். அவர் அளித்த கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே ருக்ஷானாவின் சடலத்தை கைபற்றிய போலீஸார், அவர் அணிந்திருந்த நகை, கடிகாரம் ஆகியவற்றையும் பிரசாந்த் புதைத்து வைத்திருந்த இடத்தில் கைப்பற்றினர். நகைக்காகக் கொலை செய்யப்பட்டதாக வழக்கைத் திசை திருப்புவதற்காகவே, நகையை பிரசாந்த் புதைத்து வைத்தது தெரியவந்தது. மேலும், இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ருக்ஷானாவின் பெற்றோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். அதில், எனது மகள் ருக்ஷானா கொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளி மட்டும் அல்லாமல் மற்ற நபர்களும் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்து, அவர்களையும் விசாரித்து கைது செய்யுமாறு ஏற்கனவே காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்திருந்தோம். இந்தப் புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், கைது செய்யப்பட்ட கொலையாளி வெளியில் வரக்கூடிய சூழ்நிலைகள் உள்ளதால், கொலையாளி மீது குண்டர் சட்டம் வழக்குப் பதிவு செய்து வழக்கைச் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றம் செய்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை வெகுவாக விசாரித்துச் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.