கோவை, டிசம்பர் 9
கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இன்று முதல் ஊர்க்காவல் படையினர் தொடங்கினர்.

தமிழ்நாடு, ஊர்க்காவல் படை, கோவை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் இன்னர் வீல்ஸ் தன்னார்வ அமைப்பின் சார்பில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் தொடங்கப்பட்டது. நிகழ்வை ஊர்க்காவல் படையின் பிரதேச தலைவர் T.K. தனசேகரன் மற்றும் பிரதேச துணைத் தலைவர் தேன்மொழி ராஜாராம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஆறு மாத காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டு இது வரை 70-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்த போதும், அவ்வப்போது டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்கமுடியாததாக உள்ளது.
இந்த சூழ்நிலையில், மாநகரில் உள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வழிமுறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஊர்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, ஊர்க்காவல் படையின் பிரதேச துணை தலைவர் தேன்மொழி ராஜாராம் நமக்களித்த பேட்டியில் கூறியது:-

"கோவை மாநகரை பொறுத்தவரை 340 ஆண்கள் மற்றும் 110 பெண்கள் என மொத்தம் 440 பேர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாநகர எல்லைக்குள் உள்ள 15 காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பலியாவதை தடுக்க ஊர்க்காவல் படை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீரரும் தனது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை விநியோகிக்க உள்ளனர். வரும் ஜனவரி மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்வானது தொடரும்."

இந்த நிகழ்ச்சியில், காவல் துணை ஆய்வாளர் K. நடராஜன் , ரோட்டரி கிளப் இன்னர் வீல்ஸ்-ன் மாவட்ட செயலாளர் வீணாபதி மற்றும் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
