டிசம்பர் 8
தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பணம் பெற்றதாக வருமான வரித்துறையினரிடம் கிடைத்துள்ள டைரியில் இடம் பெற்றுள்ள தகவலால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் 8-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ரூ.33.6 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாகப் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்திருந்ததாக சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கியப் பக்கங்கள் எனக் கூறி தனியார் ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர்களுக்கு சேகர் ரெட்டி வழங்கிய லஞ்சப்பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் மகாதேவன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர்களிடையே, கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளுக்கு மத்தியில், சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்றதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, சேகர் ரெட்டியின் டைரி தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேகர் ரெட்டி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரது டைரியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்ற அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது பற்றி அனைத்து உண்மைகளும் வெளிவர சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். அது போன்ற டைரி ஏதும் இல்லை என அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். ஆனால் ஆங்கிலப் பத்திரிக்கைகள் பலவற்றிலும் இது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு கூறினார்.