கோவை, டிசம்பர் 4
கோவை நஞ்சப்பா சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைத்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் பார்க் கேட்டிலிருந்து டெக்ஸ்டூல் பாலம் வரை ரூ.120 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதனை, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில், நஞ்சப்பா சாலையிலிருந்து கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, வி.கே.கே.மேனன் சாலை, ஆவாரம்பாளையம் சாலைக்குச் செல்ல வாகன ஓட்டிகள் பாலத்தின் கீழேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதேபோல, கணபதியிலிருந்து காந்திபுரம் வரவும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காந்திபுரம் பகுதிக்கு வர கீழேயே வர வேண்டிய சூழல் உள்ளதால் காந்திபுரம் பகுதியில் எப்போதும் போல போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில், பாலத்தின் வடிவமைப்பை மாற்றிப்பதுடன், ரவுண்டானா அமைத்துத் திறக்கப்பட்டுள்ள புதிய பாலத்துடன் இணைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், புதிய பாலத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மேலும், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் பேருந்து நிலையத்திற்கும் கிராஸ்கட் சாலைக்கு வரக்கூடிய வகையில், தமிழக அரசு முடிவு செய்தபடி சுரங்க நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.