திருப்பூர், டிசம்பர் 3
அவிநாசியிலிருந்து அன்னூர் நோக்கி அரசு பேருந்து இன்று பிற்பகல் சென்றுகொண்டிருந்தது. அவிநாசியை அடுத்து ஆட்டையம்பாளையம் அருகே செல்லும்போது, அடையாளம் தெரியாத கார் ஒன்று அசுர வேகத்தில் முந்திக்கொண்டு பேருந்தை ஒதுக்கியபடி சென்றது. இதில் நிலை தடுமாறிய அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கவிழ்ந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்து பக்கவாட்டில் சாய்ந்தபடி விழுந்தது. பேருந்தில் பயணம் செய்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் அடிபட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் என பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம், அவிநாசி அரசு மருத்துவமனை மற்றும் அவிநாசி, திருப்பூர் பகுதிகளிலிருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

இதில் அவிநாசியை அடுத்து தண்டுக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த சுண்டப்பன் (70) மற்றும் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (55) ஆகய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், 8 பெண்கள், ஒரு குழந்தை, 19 ஆண்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களுக்கு அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்தபகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்ததால் அப்பகுதியில் போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.
பேருந்து கவிழ்ந்து விபத்துக்-குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.