சென்னை, டிசம்பர் 1
ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தற்போது அத்தொகுதியில் தேர்தல் வரும் டிசம்பர் 21-ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைத்தேர்தலின் போது, போட்டியிட்ட மதுசூதனன், அதிமுக சார்பிலும் திமுக சார்பில் மருது கணேஷ் ஆகியோரும், டிடிவி தினகரன் சுயேட்சையாகவும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மூவரும் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஷால் இன்று வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.