கோவை, நவம்பர் 28
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஹாதியா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் புறப்பட்டார்.
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது ஒரே மகள் அகிலா (24) என்பவருக்கும் ஷபின் ஜகான் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
தனது மகளை ஷபின் ஜகான் மூளைச்சலவை செய்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதற்காகவே திருமணம் செய்துள்ளதாக அகிலாவின் தந்தை அசோகன் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஹாதியா-வை அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்க உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஷபின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஹாதியா தனது விருப்பம் போல வாழ உரிமை உள்ளது என்று தீர்ப்பு வழங்கியது. சேலம் சிவராஜ் சித்த வைத்திய சாலையில் சித்தா படிப்பை மேற்கொள்ளும் ஹாதியாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கு முடிந்த பின்னர் இன்று மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஹாதியா இன்று மாலை கோவை வந்தடைந்தார்.
ஹாதியா வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினருக்கான பாதையில் அழைத்து வரப்பட்ட அவர் உடனடியாக போலீஸ் வாகனத்தில் ஏறி பலத்த பாதுகாப்புடன் சேலம் அழைத்துச்செல்லப்பட்டார்.
ஹாதியா வருகையை அறிந்த அவரது ஆதரவாகர்கள், அவருக்கான தங்களது ஆதரவினை காகிதங்களில் எழுதி உயர்த்திக்காட்டியது குறிப்பிடத்தக்கது.