கோவை, நவம்பர் 13
கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் காரணமாக வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் இளநீரை அதிக அளவு பருகி வருகிறார்கள்.
கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி. கேரளா மாநிலம் பாலக்காடு, ஆழுவா போன்ற பகுதிகளிலிருந்து விற்பனைக்கு இளநீர் கொண்டுவரப்படுகிறது.
இரவு நேரங்களில் குளிர் வாட்டி வதைத்த போதும் பகலில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், மக்கள் என அனைவரும் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். இது குறித்து ஐ.டி ஊழியர் ஜே. கார்த்திக் கூறுகையில் “ தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்வதால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு வயிற்று வலி, தலை வலி போன்றவை ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தினமும் இளநீர் பருகி வருகிறேன். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து நன்றாக உள்ளது” என்றார்.
இளநீர் விற்பனை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தற்போது இளநீர் ரூபாய் 2௦ முதல் 3௦ வரை விற்கப்படுகிறது. அதே சமயம் இளநீர் வரத்து சந்தைக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. எனினும் விளைச்சல் குறைந்தது காரணமாக இளநீர் வரத்து குறைந்து தான் காணப்படுகிறது என வியாபாரிகள் கூறினர்.
இளநீர் வியாபாரி எல். முத்துசாமி கூறுகையில்” இளநீர் வியாபாரம் நன்றாக உள்ளது. பொதுமக்கள் அந்நிய நாட்டு பானத்திற்கு எதிராக விழிப்புணர்வு அடைந்து தற்போது இயற்கை பானமான இளநீரை அதிக அளவில் குடிக்க தொடங்கிவிட்டனர். வியாபாரம் நன்றாக இருந்தாலும் இளநீர் வரத்து குறைந்து தான் காணப்படுக்கிறது. கேரளாவிலிருந்து இளநீர் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. லாரி வாடகை அதிகமாக உள்ளதால் இளநீர் விலையும் அதிகமாக உள்ளது.” என்றார்.
ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே போல் இளநீர், பழங்கள், பழச்சாறு போன்றவை பருகும் போது உடல் இன்னும் ஆரோக்கியம் அடைகிறது என அவர்கள் கூறுகின்றனர்.