நவம்பர் 10
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை என்ற தன்னாட்சி பொருந்திய அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரைவைக் கூட்டத்தில், தேசிய தேர்வு முகமை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்காக என்று தனியாக 'தேசிய தேர்வு முகமை' ஒன்று உருவாக்கப்படும். இது முற்றிலும் தன்னாட்சி பொருந்திய அமைப்பாக செயல்படும். இனி மத்திய பள்ளிக் கல்வி வாரியம் இத்தகைய தேர்வுகளை ஒருங்கிணைக்காது.
நாடு முழுவதும் மாவட்டம் தோறும் தேசிய தேர்வு முகமையின் மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம் 40 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். தேசிய தேர்வு முகமையினை உருவாக்குவதற்கான பணிகளுக்காக முதல் கட்டமாக ரூ. 25 கோடி ஒதுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது