கோவை, நவம்பர் 10
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கோவை மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. எனவே, இதற்கான பணிகளைத் தொடங்கிய மாவட்ட நிர்வாகம், குளங்களை தூர்வார்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிறுவனத்தால், கோவையில் 'புதுமையான ஸ்மார்ட் சிட்டி' ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சி மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பிரான்ஹோபர் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை ஆணையாளர் ப. காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் என். நடராஜன், செயற்பொறியாளர்கள் சரவணன், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.