கோவை, நவம்பர் 10
நகரின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகளில், ப்ளாஸ்டிக் குப்பைகளோடு கட்டிடக் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், நீர் ஆதாரங்கள் மாசடைந்து சுகாதாரமற்ற சூழல் உருவாகி வருகின்றது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இ.எப்.ஐ போன்ற தன்னார்வ அமைப்புகள் குளங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைக் கழிவுகளை தொடர்ந்து அகற்றுவதோடு, பொதுமக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை குமாரசாமி குளத்தை அடுத்துள்ள கிருஷ்ணாம்பதி குளக்கரையில் கட்டிடக் கழிவுகளை கொட்டியவர்களையும் அவர்களின் வாகனத்தையும் தடுத்தி நிறுத்திய தன்னார்வலர்கள், மாநகராட்சி நிர்வாகத்திடம் அவர்களை ஒப்படைத்துள்ளனர்.
பின், மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர், வாகன உரிமையாளரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிப் பெற்றுக் கொண்டு, ரூபாய் 5000 அபராதம் விதித்து வாகனத்தை விடுவித்துள்ளார்.

மேலும், கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகளும் குளக்கரையிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.
இதுபற்றி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது, 'செங்கல், இரும்புக் கம்பிகள் மற்றும் சிமெண்ட் கான்க்ரீட் போன்ற கட்டிடக் கழிவுகள் குளங்களில் கொட்டப்படுவதால், நீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு சுற்றுச் சூழல் மாசடைகிறது. இந்த பிரச்சனை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கட்டிடக் கழிவுகளை மறுசுழற்ச்சி செய்யும் வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவாக உருவாக்கித் தர வேண்டும்.' என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம், உக்கடம் பேருந்து நிலையம் அருகே, சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், 9 கோடி ரூபாய் செலவில், 100 டன் அளவிற்கு கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்ட ஆலை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், அந்தப் பணிகள் வெறும் சுற்றுச்சுவர் எழுப்பியதோடு நிறுத்தப்பட்டுள்ளன. கட்டிடக் கழிவுகள் தொடர்ந்து குளங்களிலும், பொது நிலங்களிலும் கொட்டப்பட்டு வருகின்றன.