கோவை, நவம்பர் 10
கோவையில் மணல் ஒப்பந்ததாரர் ஒ. ஆறுமுகசாமி, தொழிலதிபர் சஞ்சீவன் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது.
சென்னை, கோவை, தஞ்சை மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் நேற்று முதல் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கோவையில் மட்டும் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் பந்தயச்சாலை பகுதியில் உள்ள வீடு, அவினாசி சாலை மற்றும் ராம்நகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதேபோல, நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சஞ்சீவனுக்கு சொந்தமான போத்தனூர் பகுதியில் உள்ள நீலகிரி ஃபர்னிச்சர் கடை, வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இருவரது வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று தொடங்கிய இந்தச் சோதனை, இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.