கோவை, நவம்பர் 10: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஸ்மார்ட் ட்ரீ, சென்சார் குப்பைத் தொட்டிகள், சுற்றுச்சூழலை பாதிக்காத மக்கும் தன்மையுடைய பைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனைத்தொடர்ந்து, தற்போது பொதுமக்கள் தங்களுடைய புகார்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் எளிதாகவும், விரைவாகவும் தெரிவிப்பதற்காக பிரத்யேக செயலியை CCMC Central (Citizens Grievance Redressal App) அறிமுகப்படுத்தியுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் நிலவும் குடிநீர் விநியோகம், சுகாதாரம், கல்வி, நகரமைப்பு, வரி, தேர்தல், இ-சேவை மற்றும் இதர பிரச்சனைகள் பற்றிய புகார்களை இந்த செயலியின் மூலம் எளிதாக பதியலாம்.
குறிப்பாக, புகாரை பதியும்பொழுது அது தொடர்பான உண்மைத் தன்மையுடைய புகைப்படத்தையும் இணைத்து பதிய வேண்டும். மேலும், புகார் சம்பந்தப்பட்ட மண்டலம், வார்டு மற்றும் பாதிப்புகள் குறித்தும் இச்செயலியில் பதிய வேண்டும்.

புகார் அளித்துமுடித்த பின்பு அதற்கான பிரத்யேக எண் மனுதாரருக்கு வழங்கப்படுகிறது. மேலும், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் அலுவலர் குறித்த விபரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.
முன்னதாக, மாநகராட்சி குறித்த புகார்களை எந்த அலுவலரிடம் தெரிவிப்பது, அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என மக்கள் மத்தியில் அறியாமையே நிலவி வந்தது. இந்நிலையில், மக்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையிலும், புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்ற தகவலையும் உள்ளடக்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாநகராட்சியின் இந்த செயலியினை பதிவிறக்கம் செய்ய "https://goo.gl/TPagds"