கோவை, நவம்பர் 10: இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200 குழந்தைகள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த நோயிலிருந்து குழந்தைகளைக் காக்க தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்.
கோவையில் இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது நிமோனியா நோயின் பாதிப்புகளும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என விவாதிக்கப்பட்டது.
சர்வதேச அளவில் நிமோனியா நோய் ஏற்பட காரணமான ஸ்ட்ரெப்டோகாக்ஸ் நிமோனிக்கா என்னும் பாக்டீரியாவால் இறப்பு சதவிகிதம் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.
இந்த நோய் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அதிக அளவில் தாக்குகிறது.
இதுக்குறித்து இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர் எம்.இஸ்மாயில் கூறியதாவது, நிமோனியா நோயை தடுக்க தற்போது நம்மிடம் பிசிவி 13 என்ற தடுப்பூசி உள்ளது. இதன் மூலம் லட்சம் குழந்தைகளை இந்த நோயிலிருந்து காக்க முடியும். 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்தாண்டு மார்ச் முதல் தான் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. 2௦18-ம் ஆண்டுக்குள் 9௦ சதவிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
2௦15-ம் ஆண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,5௦௦ குழந்தைகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
ஐக்கிய நாடுகள் திட்டம் மூலம் இந்த ஆண்டில் 21 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோயை தடுக்கும் முறை பற்றி பெற்றோர்களுக்கு இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் சிறப்பான முறையில் எடுத்து கூறிவருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிமோனியா நோயை தடுக்கும் முறை குறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ கூறுகையில், "குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். போதுமான ஊட்டசத்துகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.