கோவை, நவம்பர் 9: வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் 'கிளீனிங் பிளாக் மணி' என்ற பெயரில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வருமான வரிசோதனையில் சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் குறிவைக்கப்பட்டனர்.
சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியுள்ளனர்.
ஜெயா டிவி அலுவலகம் தொடங்கி சாதாரண அடிப்படை ஆதரவாளன் வீடுவரையில் நடத்தப்பட்ட இந்த திடீர் சோதனை வழக்கமான ஒன்று தான் என்றும், கருப்பு பணம் தொடர்பான புகாரை தொடர்ந்தே இந்த திடீர் சோதனை என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டது என்றும், சசிகலா தரப்பினரை முற்றிலுமாக முடக்கி வைக்க வருமான வரித்துறை என்ற ஆயுதத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் கோவை சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையை சேர்ந்த தொழிலதிபரான ஆறுமுகசாமி என்பவரது வீடு, அலுவலகம் மற்றும் நிறுவனங்கள் என மொத்தம் 8 இடங்களில் இன்று காலை புகுந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், தொழிலதிபர் சஜீவன் என்பவருக்கு சொந்தமாக கோவை போத்தனூர் பர்னிச்சர் கடை மற்றும் குடோன் ஆகிய இரு இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் ஆறுமுகசாமி என்ற தொழிலதிபர் பள்ளி பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும் மேற்படிப்பை தொடரமுடியாத மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.
கட்டுமான பொருட்கள், திரையரங்கம், பேப்பர்மில்ஸ் என்று பல தொழில்களில் கொடிகட்டுப்பறக்கும் இவருக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் மிக நெருக்கம் என்று தெரிகிறது.
இதேபோல், சஜீவன் என்ற தொழிலதிபர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் உட்கட்டமைப்பு பணிகள் செய்தவர். பர்னிச்சர் தொழிலில் கால்பதித்த இவரும் சசி தரப்பின் ஆதரவளார் என்று கூறப்படுகிறது.
கோவை பொறுத்தவரையில் இவர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.