கோவை, நவம்பர் 6: இந்தி திரைப்படமான 'பத்மாவதி' இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதால் அதனை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-
"இந்தியில் வெளியாகவுள்ள 'பத்மாவதி' திரைப்படத்தில் ராணி பத்மினியின் வரலாறு மறைக்கப்பட்டு உண்மை சம்பவங்களை திரித்துக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன . இதன் காரணமாக இத்திரைப்படத்தை குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் திரையிட தடை செய்துள்ளன .
அதே போல் தமிழகத்திலும் 'சர்ச்சைக்குரிய' இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். அவ்வாறு தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்."