கோவை, நவம்பர் 4 : கோவை மாவட்டம் வால்பாறைப் பகுதியில் யானைகள், தேயிலைத் தோட்டங்களில் உலா வருவதால் தேயிலை பறிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.
வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குள் கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடின. இதுமட்டுமல்லாமல் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாணிக்கா எஸ்டேட்டில் உள்ள ரேசன் கடையை காட்டு யானைகள் உடைத்து அரிசி மூட்டைகளைச் சேதப்படுத்தின. அப்பகுதியில் டீ கடை நடத்தி வரும் கரீம் என்பவரது கடையை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை நாசம் செய்தது. சத்தம் கேட்டு அங்கு விரைந்த பொதுமக்கள் கூச்சலிட்டு அந்தக் காட்டு யானைக் கூட்டத்தை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.

இதேபோல, தாய்முடி உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தேயிலை தோட்டத்திற்குள் யானைகள் நுழைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. உடனே அங்குப் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேறு தேயிலை தோட்டத்திற்குப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இப்பகுதியில் 11 காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் தொடர்ந்து முகாமிட்டு வருகிறது. அதனை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.