நவம்பர் 3: சென்னையில் பெய்து வரும் கன மழையினைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. சில உள்மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.
கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று நடக்க இருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.