கோவை, அக்டோபர் 28: சுற்றுசூழல் மாசுபடாத வகையில் பசுமை தீபாவளி கொண்டாடியவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மருத்துவர்.க.விஜயகார்த்திகேயன் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
கோவை மாநகராட்சி சார்பாக சுற்றுசூழல் மாசுபடாமல் பசுமையான தீபாவளி கொண்டாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘பசுமை தீபாவளி’ கொண்டாடும் நபர்களுக்கு பாராட்டி பரிசளிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார். அதன்படி பசுமை தீபாவளியை கொண்டாடிய பொதுமக்கள், மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடமிருந்து 140 பரிந்துரைகள் வாட்ஸ் ஆப் மூலம் பெறப்பட்டன.
இவர்களில், சிலர் சுற்றுசூழல் மாசுபடாத வகையில் ஏழைகள் மற்றும் பழங்குடி மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடிக்காமல் பசுமை தீபாவளி கொண்டாடுவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியிருந்தனர். பசுமை தீபாவளி கொண்டாட்டங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இறுதியாக 14 தனிநபர்கள், 6 தன்னார்வ நிறுவனங்கள், 9 தனியார் நிறுவனங்கள், 4 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 1 குடியிருப்பு சங்க நிர்வாகிகள், ஆகமொத்தம் 34 பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் ஆணையாளர் க.விஜயகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்து, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.