கோவையில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திமுக-வினர் 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் கடந்த திமுக ஆட்சியின் போது ரயில்வே மேம்பாலம் அமைக்க பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், அடுத்து ஆட்சியில் அமர்ந்த அதிமுக அரசு மேம்பாலப்பணிகளை கைவிட்டதாக அப்பகுதி மக்களால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பாலம் உள்ளிட்ட கோவையில் கட்டப்பட்டுவரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி திமுக சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, செஞ்சிலுவை சங்கம் அருகே ஒன்று கூடிய 500-க்கும் மேற்பட்ட திமுக-வினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். ஆனால், அவர்களை செஞ்சிலுவை சங்கம் அருகிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது, எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாலப்பணிகளால் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதே போன்று காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்படும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என திமுக-வினர் வலியுறுத்தினர்.
இதனைத்தொடந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.